அனுதாபத்தின் ஆப்பிள்கள் – சோனியா செரியன்
(தமிழில்: கதிரேசன்)

சோனியா செரியன் (லெப்டினன்ட் கர்னல்) (1973) கேரளா மாநிலம் கண்ணூரைச் சேர்ந்தவர். பல் மருத்துவராக ராணுவத்தில் பதினான்கு வருடங்கள் இந்தியாவின் பல்வேறு இடங்களில் பணிபுரிந்தவர். சோனியா செரியனின் முதல் நூல் ”இந்தியன் ரெயின்போ” 2023-ல் மாத்ருபூமி பதிப்பகம் வெளியீடாக வந்தது. “memoirs” (நினைவுகள்) என்ற வகைமைக்குள் வைக்கப்பட வேண்டிய நூல். பதினான்கு வருட ராணுவ வாழ்க்கையில் சோனியா சந்தித்த மனிதர்கள், நிகழ்வுகள் சார்ந்த நினைவுகளை புனைவு மொழியில் எழுதப்பட்டதே இந்நூல்.
“மலையாளத்தில் முதன்முறையாக, ஒரு பெண்ணின் ராணுவ நினைவுக் குறிப்புகள் வெளியிடப்படுகிறது. லெப்டினன்ட் கர்னல் சோனியா செரியனின் ராணுவ நினைவுக் குறிப்புகள், சாகசக் கதையாகவும், உணர்வுப்பூர்வமான பாடலாகவும் உள்ளன. இவரின் கதை சொல்லல் தன்மையும், புனைவு மொழியும் வளமானது. இந்த இளம் எழுத்தாளரின் நினைவுகளில் நிறைந்திருக்கும் நிகழ்வுகள் இராணுவ வாழ்க்கையின் மனிதக் கதைகளை மட்டுமல்ல, அதில் பாயும் பிற உயிர்களின் நினைவுகளையும் ஒன்றாக இணைக்கின்றன. இந்த புத்தகத்தின் மூலம் சோனியா மலையாள இலக்கியத்திற்கு பரிசளிப்பது மனிதநேயம், இரக்கம், அன்பு மற்றும் சாதாரண மக்களின் பிழைப்புக்கதை. இந்நூல் தருவது ஒரு தனித்துவமான மற்றும் அழகான வாசிப்பு அனுபவம்.” என எழுத்தாளர் பால் சக்காரியா மதிப்பிட்ட ”இந்தியன் ரெயின்போ” நூலிலிருந்து “அனுதாபத்தின் ஆப்பில்கள்” கதை நீலி இதழுக்காக மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது.
-கதிரேசன்
*

அனுதாபத்தின் ஆப்பில்கள் – சோனியா செரியன்
ஏப்ரல் மாதம்…. இமயத்தின் சரிவுகளில் பனி உருகி செடிகள் பூக்கத் துவங்கும் காலம். குளிர்காலம் ஆரம்பித்தவுடன் மலையடிவாரத்திற்கு போன பறவைகள் பல மலைகளைக் கடந்து மீண்டும் மலையுச்சிக்கு திரும்பத் தொடங்கியிருக்கின்றன.
மழைச்சரிவில் கட்டப்பட்டிருக்கிற ராணுவ மருத்துவமனையின் வளாகம் முழுக்க பீச், பிளம், ஆப்ரிகோட் மரங்களால் நிரம்பியிருக்கிறது. ஏதோ ஒரு காலத்தில் யாரோ சிலர் நட்டு வைத்து வளர்த்தவை.
பல் மருத்துவமனையின் முன்னால் இருக்கும் பிளம் மரம் அடி முதல் நுனி வரை பூத்துக் குலுங்குகிறது. மயக்கும் நறுமணம். தேன்சிட்டுகளும் , பட்டாம்பூச்சிகளும் நிறைந்திருந்தன.
திங்கட்கிழமை கூட்டமான ஒரு ஓ பி டென்டல் முடித்துவிட்டு நானும், முருகனும், திரிவேதியும் வாசலில் இருந்த பிளம் மரத்தின் பூங்குலை ஒன்றை பறித்து மேஜை மேல் வைத்து அதனை செதில் செதிலாக பிரித்தெடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தோம். ரெட்கிறாஸ் முத்திரையுள்ள பழைய வெண்கல பூ பாத்திரத்தை காலையிலேயே பளபளப்பாக தேய்த்து கழுவி தண்ணீர் நிறைந்து மேஜை மேல் வைக்கப்பட்டிருந்தது.
வழக்கத்திற்கு மாறாக மதியநேரம் ரவுண்ட்ஸ் வந்த ஹாஸ்பிடல் கமாண்டிங் அதிகாரி மஹபத்ரா சார் கண்ணில் பட்டுவிட்டோம்! ஒரிசாக்காரர். பரம சாது! பூக்குலையை பார்த்ததும் “பழமாக ஆக சாத்தியமான இத்தனை பூக்களை பறித்துவிட்டீர்களே!” என்றார். காலையில் நடந்த தேநீர் விருந்தில் பாதாம் மரக்காட்டையே தின்று தீர்த்து விட்டீர்களே என்ற குறும்பான மறுகேள்விக்கு பதிலளிக்க முடியாமல் அவர் விழிப்பதைப் பார்த்து மகிழ்ந்திருக்கும் போதுதான் ஆபரேசன் தியேட்டரிலிருந்து அழைப்பு வந்தது..
மறுபுறம் மேஜர் அனூப் மலையாளி ”கொஞ்சம் இங்க வரமுடியுமா?”. அவருடைய அழைப்பில் தெரிந்த அவசரத்தால் நாங்கள் மூவரும் உடனே கிளம்பினோம். மஹாபத்ரா சாரும் கூட வந்தார். அங்கு சென்றபோது ஆபரேசன் தியேட்டருக்கு முன்னால் உள்ள அறையில் ரத்தவெள்ளத்தில் குளித்த ஒருவர் உடல் சுருண்டு படுத்துக் கிடந்தார். ரத்தம் தோய்ந்த கத்தி ஒன்று துணியில் சுற்றி வைக்கப்பட்டிருந்தது.
யாக் ஆடுகளின் ரோமம், எண்ணெய், வேறு ஏதேதோ புதிய மணங்கள் ஆபரேசன் தியேட்டர் மருந்துகளின் வாடையை மீறி வீசியது. கீழே கிடந்தவரின் தாடையில் ஏற்பட்டிருந்த ஆழமான காயத்திற்கு ஏர் பேக் கொடுத்தபடி நர்ஸ்கள் அருகில் நிற்கிறார்கள்.
எப்படியொரு வெட்டு! ஒரே ஒரு வெட்டுதான். மாண்டிபிள் (கீழ்தாடை எலும்பு ) நேராக முறிந்திருக்கிறது. தலையை குறி பார்த்து வெட்டிய வெட்டு. கொஞ்சம் விலகி தாடை எலும்பில் பட்டிருக்கிறது. தாடையில் படவில்லையென்றால் இப்போது தலை துண்டாக விழுந்திருக்கும்!
அனூப் சொன்னார்.
சகோதரர்களுக்கு இடையே வந்த சண்டை!
பொதுவாக இங்கு இதுபோன்ற கேஸ்கள் வருவதில்லை! மொம்ப பழங்குடிகள் பொதுவாகவே சாதுவானவர்கள். நீளமான வுருக்கியை *(வுருக்கி_ இமயமலைப் பகுதியில் வசிக்கும் பழங்குடிகள் பயன்படுத்தும் பிரத்யேக வடிவமைப்புடைய கத்தி..)
இடுப்பில் சொருகிக் கொண்டுதான் எப்போதும் திரிவார்கள் என்றாலும் கத்தியை இடையிலிருந்து அவர்கள் எடுப்பதேயில்லை. அப்படி எடுத்தாலும் அது காட்டு முயலையோ செடிகளையோ வெட்டுவதற்காத்தான் இருக்கும்.
மூத்த சகோதரனுக்கு குழந்தை பிறந்ததற்காக நடைபெற்ற விருந்து! சகோதரர்கள் இருவரும் வேண்டிய அளவு அபூங்கை உள்ளே தள்ளியிருக்கிறார்கள். (அபூங் மலைப்பகுதியில் விளையும் நெல் சாகுபடியின்போது காய்ச்சி எடுக்கப்படும் வீரியமுள்ள மது, ஒரு வகையான ரைஸ் பீர்) இவர்களுடைய வீடுகளில் பெரிய மர பீப்பாய்கள் நிறைய அபூங் இருக்கும். மூக்கிற்கு பழக்கமில்லாத அந்த புதிய வாசனை அபூங்தான் என்பது புரிந்தது.
மருத்துவமனை வார்டு உதவி பணிப்பெண் அன்ஷு நின்றிருந்தாள். இந்த மலைப் பிரதேசத்தை சேர்ந்தவள். எங்களின் பிரதான மொழிபெயர்ப்பாளர். அவளுக்கு பக்கத்தில் அந்த இரண்டு சகோதரர்களின் அம்மா நின்றிருக்கிறாள்! முனகலோ அழுகையோ ஒன்றுமில்லை! மரத்தில் செதுக்கி நூலில் கோர்த்து குஞ்சலம் வைத்து தைக்கப்பட்ட 108 மணிகள் கொண்ட ஜெபமாலை ஒன்று அவள் கை விரல்களுக்கிடையில் வேகமாக சுழன்றுகொண்டிருக்கிறது.
வாளுக்கும் கழுத்துக்குமிடையே ரட்சகனாக இருந்த தாடையெழும்பு பரிதாபமாக பிளந்து கிடக்கிறது. மாண்டிப்பில்லை முழுக்க பிளந்து நாக்கு வரை கத்தி நுழைந்திருக்கிறது. உண்மையில் இது பிளாஸ்டிக் சர்ஜனுடைய, மாக்சில்லோ பேசியல் சர்ஜனுடைய வேலை. சில அடிப்படை சிகிக்சைகள் செய்துவிட்டு கீழே இருக்கும் தேஜ்பூர் மருத்துவமனைக்கு அனுப்பி விடலாமென முடிவு செய்தோம். அன்ஷு மூலமாக அதனை அந்த சகோதரர்களின் அம்மாவிடம் தெரிவித்தோம்.
“தேஜ்பூர் வரை வாகனத்தில் கொண்டு செல்வதற்கு எங்களிடம் பணமில்லை. இருந்த ஒரே வருமானமான யாக் ஆட்டை விற்றுதான் பெரியவனின் மனைவியின் பிரசவச் செலவு பார்த்தோம். பிரசவமும் சீசேரியனாகப் போய்விட்டது. உங்களால் முடிந்தால் பாருங்கள், இல்லையேல் வீட்டுக்கு அனுப்பி விடுங்கள். நாட்டு மருந்து வைத்துப் பார்த்துக் கொள்கிறோம்” அம்மாவின் முனுமுனுப்பை அன்ஷு எங்களிடம் விளக்கினாள்.
அவள் சொல்வது உண்மையாகத்தான் இருக்கும். ஒடுங்கிய மலைப்பாதை வழியாக கீழே இறங்கி அசாமிலிருக்கும் தேஜ்பூர் செல்லவேண்டுமென்றால் ஒரு நாள் முழுவதுமாக தேவைப்பட்டும். 4*4 வண்டியில் தான் கொண்டு செல்ல முடியும். மலை உச்சியில் ஆடுகளை மேய்த்து வாழும் நாடோடி மக்கள் இவர்கள். பனியுருகிய காலங்களில் பள்ளத்தாக்கிலிருந்து பார்த்தால் பச்சை காகிதத்தாள்கள் போல அவர்களுடைய மேய்ச்சல் வெளி தெரியும். அதில் கருத்த மச்சங்களை போல யாக் ஆடுகள்..
மிகவும் ஆபத்தான காயம். ஒன்றும் செய்யாமல் விட்டுவிட்டால் பழுப்பேறி மரணம் நிச்சயம். நானும் அனூப்பும் ஒருவைரையொருவர் கவலையோடு பார்த்துக் கொண்டோம். சிறிது நேரம் கழித்து “கொஞ்சம் ட்ரை பண்ணுவோமா” என அநூப் கேட்டபோது நானும் உடனே தலையாட்டினேன்.
அனஸ்தீஷியா நிபுணர் கர்னல் பானர்ஜி மிகவும் அனுபவம் வாய்ந்தவர். மிக குறைவான வசதிகள் உள்ள இந்த மருத்துவமனையில் இது போன்ற ஒரு அறுவைச் சிகிச்சையை நடத்துவதில் உள்ள குழப்பங்களையும் ஆபத்துக்களையும் குறித்து அவர் பார்வையில் எந்த அனுபவுமுமில்லாத, மிக இளம் மருத்துவர்களான எங்களுக்கு எடுத்துச்சொல்லி புரியவைக்க முயன்றார். நாங்கள் இரண்டுபேரும் சற்று சோர்வடைந்தாலும் ஒன்றும் பேசாமல் எங்களிடமிருந்து வரும் பதிலை மட்டும் எதிர்பார்த்து காத்திருக்கும் அந்த அன்னையை பார்க்கும்போது எதையும் எதிர்கொள்வோம் என்றொரு துணிச்சல். இறுதியில் மயக்கவியல் நிபுணரும், மஹாபத்ரா சாரும் எங்களது பிடிவாதத்திற்கு சம்மதித்தார்கள். மூன்று நான்குமணிநேரம் ஆகிவிட்டது என்றாலும் அறுவைசிகிச்சை சரியாக நிகழ்ந்துமுடிந்தது.
உடைந்த எலும்புகளில் மாட்டிக்கொண்ட உடைந்த பற்களையும், பல்வேர்களை அகற்றி காயத்தின் சரியான இடத்தை கண்டறிந்து, கிழிந்த நாக்கை, வாயைச் சேர்த்து தைத்து, சதைகளையும் முகத்தின் தோல்களையும் அதிக கவனம் எடுத்து தைத்து, அறுவை சிகிச்சையை முடித்து வெளியேற நான்கு மணிநேரம் ஆகியது.
ஆபரேசன் தியேட்டரை விட்டு வெளிவந்த போது அந்தி இருள ஆரம்பித்துவிட்டிருந்தது. வாசலில் இருந்த ஆப்ரிக்கோட் மரத்திற்கு கீழே இரண்டு அருணாச்சல் போலீஸ்காரர்களுக்கு நடுவில் நிற்கும் ஆளை ! தம்பியை வெட்டிய மூத்த சகோதரனை அன்சு காட்டினாள். அவன் பெயர் தாஷி, வெட்டப்பட்ட ஆள் பேமா….
பேமா வாலிப பருவம். துண்டு துண்டாக வெட்டிப் போட்டாலும் எதையேனும் பற்றிக்கொண்டு வளரும் நல்ல மலைநாட்டு கொடி போன்ற உடல்!. சில ஆண்டிப்பாயாட்டிக் மருந்துகளும் மருத்துவமனையின் சீரான கண்காணிப்பாலும் வேகமாக அவனது காயம் ஆறியது. அதன்பிறகுதான் மனதிலிருந்த பதட்டம் நீங்கி நானும் அநூப்பும் நிம்மதி அடைந்தோம். பேமா ஒரு மாத காலம் மருத்துவமனையில் இருந்தான். பின்னர் மலையேறியவன், இரண்டு வாரம் கழிந்து வரச் சொன்ன உடல் பரிசோதனைக்கு கூட மலையிறங்கவில்லை.
வழக்கமான ஒரு நாள். தூரத்திலிருந்து யாரோ பார்ப்பதற்காக வந்திருக்கிறார்கள் என்ற செய்தி கேட்டு அறையிலிருந்து இறங்கிச் சென்றேன். முன்பு பழக்கமில்லாத ஒரு பழங்குடி சமூத்தைச் சேர்ந்த ஆள். நூல் வேலைப்பாடுடைய நீண்ட ஜிப்பா, மங்கிய சிவப்பு நிறம். இடுப்பில் வெள்ளி நிறத்தில் மின்னுகிற உரையில் சொருகி வைக்கப் பட்டிருக்கும் வுருக்கி. யாக் ஆடுகளின் ரோமம் வைத்து தைக்கப்பட்ட தொப்பி. இளம் பிரம்பு குச்சிகளை வைத்து உருவாக்கிய அழகிய கூடை ஒன்று வாசலில் இருந்தது… ஒன்றும் பேசாமல் சிரிக்காமல் முன்னே நிற்கிறார். நான் அவரது கண்களை உற்றுப் பார்த்தேன், அது மெல்ல மூடியது. இங்கு வந்து இவ்வளவு நாள் ஆகியும் அவர்களது முகபாஷையை புரிந்து கொள்ள முடியவில்லை.
எவ்வளவு வேகம் முடியுமோ அவ்வளவு வேகத்தில் திரும்பிச் சென்றுவிடவேண்டும் என்பது போல இருந்தது அவரது ஃபாவம். சிறிது நேரம் மெளனமாக இருந்தவரை மொழி தெரியாமல் எப்படி பேசுவது என நான் முழித்துக் கொண்டிருக்கும் போது என்னைக் கடந்து சென்ற முருகன் அருகே வந்து காதில் கிசுகிசுத்தார்…
மேடம் ஆள் யாருன்னு தெரியுதா
நம்ம காயேன் ஆபேல் கேஸ்!
யாரு பேமாவா முகத்தில் காயம் ஒண்ணுமில்லையே அதுக்குள்ள தழும்பு மறைஞ்சிடுச்சா? என சொல்லிக்கொண்டு நான் அவனையே ஆர்வமாக பார்க்க அவன் இல்ல மேடம். இது அவன் அண்ணன், வெட்டியவன்…. தாஷி
எனது நெஞ்சு பனிக்கட்டி விழுந்தது போல் சில்லென்றது .. இவன் எதுக்கு வந்துருக்கான். கூடைல என்ன பேமாவோட தலையா… பதற்றத்துடன் கூடையை பார்க்க ஏதோ புதையல் ஒன்றை ஆர்வமாக திறப்பதுபோல மருத்துவமனையில் இருக்கும் எல்லாரும் ஆர்வமாக கூடையை சுற்றி குழுமினார்கள்.
முருகன் அவருக்கு தெரிந்த அவனுடைய மொழியில் கூடையை திறக்கச் சொன்னான். தாஷி காட்டு வள்ளிக் கொடிகள் கொண்டு சுற்றப்பட்ட பிரம்புக் கூடையை அவிழ்த்தான். இனிப்பும் புளிப்பும் கலந்த புது வாசனை ஒன்று எங்களைச் சுற்றி பரவத் துவங்கியது, உள்ளே பைன் மரத்தின் ஊசி இலைக்களுக்கிடையே ஒன்றையொன்று தொட்டுக் கொள்ளாமல் அடுக்கியிருந்த இளம் பச்சை நிறமுள்ள ஆப்பிள்கள்!
மரத்திலிருந்தே பழுக்கவைத்து பக்குவமாக எடுத்து வைக்கப்பட்டது. அவை இறங்கி வந்த மலைச்சரிவுகள் போலவே பளப்பளப்பாக, களங்காமில்லாததாக இருந்தது.
மருத்துவமனையில் இருக்கும் எல்லாருக்கும் கொடுப்பதற்காக கூடை நிறைய கொண்டு வந்திருந்தார். அவரின் முகத்தை நோக்கி என் இருகரம் கூப்பி நன்றி சொன்னேன். அந்த சிவந்த முகத்தில் எந்த ஃபாவ மாறுதலும் இல்லை. மெல்ல தன் கூடையை எடுத்துக் கொண்டு நடந்து சென்று மறைந்தார்.
அடுத்தமாதம் பின் அதற்கடுத்த மாதம் என அவ்வருட ஆப்பில் சீசன் முடியும் வரை ஆப்பிள் பழங்கள் கொண்டுவந்து தந்தார் தாஷி.. ஒவ்வொருமுறை தாஷி வரும்போதும் இம்முறை ஆப்பிள் பழங்கள் கொண்டு வந்தது பேமாவா எனப் பார்ப்பேன். ஆனால் பேமா இறுதிவரை வரவில்லை, தாஷி மட்டும் வந்து ஆப்பில் பழங்களை தந்து கொண்டிருந்தார். அடுத்த ஆப்பில் சீசன் வருவதற்குள் எனக்கும் பணி மாறுதல் ஆகிவிட்டது…
போர்ஹேஸின் லெஜன்ட் என்றொரு குட்டிக் கதை இருக்கிறது..
ஆபேலும் காயேனும் மீண்டும் ஒருமுறை பாலைவனத்தில் சந்தித்துக் கொள்கிறார்கள்…
இருவரும் நல்ல உயரமானவர்கள்! தூரத்திலேயே ஒருவரையொருவர் அடையாளம் கண்டுக்கொள்கிறார்கள். நெருங்கி வந்து இருவரும் மண்ணில் அமர்ந்தார்கள். தீ மூட்டி அப்பம் சுட்டு பகிர்ந்து சாப்பிட்டார்கள். நாளின் இறுதிநாழிகையில் சோர்ந்து ஒன்றும் பேச இயலாமல் அவர்கள் அமர்ந்திருக்கும் போது ஆகாயத்தின் எல்லைக் கோட்டில் ஒற்றை நட்சத்திரம் ஒன்று மின்னியது. நட்சத்திரத்தின் வெளிச்சத்தில் காயேன் ஆபேல் நெற்றியில் இருந்த தழும்பைப் பார்த்தான். அவன் கையில் இருந்த அப்பம் நழுவியது..
காயேன்: என் தவறை நீ மன்னித்து விட்டாயா?
ஆபேல்: நீ என்னைக் கொன்றாயா? அல்லது நான் உன்னைக் கொன்றேனா? எனக்கு நினைவில்லை! என்னவானாலும் நாம் இப்போது முன்பு போலல்லவா இருக்கிறோம்.!
காயேன்: நீ என்னை மன்னித்திருப்பாய் காரணம் மறத்தல் என்றால் பொறுத்தல் என்றுதானே பொருள்! நானும் இனி அதை மறக்கிறேன்.
ஆபேல்: ஆம் அது சரிதான். ஆபேல் நிதானமாகச் சொன்னான் குற்றஉணர்ச்சி முடியும்போது அனுதாபம் பாக்கியிருக்கும்..
அனுதாபத்தின் புளிப்பும் இனிப்பும் நிறைந்த ஆப்பிள்களுடன் மலையிறங்கிக் கொண்டிருக்கிறான் தாஷி..
பேமா…! அதை எப்போதோ மறந்து போய்விட்டிருப்பான்…

பின்குறிப்பு:
- சூப்பா – இமயமலைப் பகுதியில் வசிக்கும் பழங்குடிகள் அணிகிற ரோமம் வைத்து தைத்த நீளமான சட்டை
- வுருக்கி – இமயமலைப் பகுதியில் வசிக்கும் பழங்குடிகள் பயன்படுத்தும் பிரத்யேக வடிவமைப்புடைய கத்தி..
- யாக் – மலைப்பு பகுதியில் வளருகிற ரோமங்கள் நிறைந்த ஒரு வகையான ஆட்டினம்
- காயேன் ஆபேல் – பைபிளில் பழைய ஏற்பாட்டில் வரும் கதை
***
கதிரேசன்: மொழிபெயர்ப்பாளர். இலக்கிய வாசகர். சுயமாக மலையாள மொழி கற்றவர். கேரளவிலுள்ள இடுக்கியில் வசிக்கிறார்.
சோனியா செரியனின் கதையை கதிரேசன் அதன் மூலமொழி சிதறாமல் மொழிபெயர்த்திருக்கிறார்.